Wednesday, January 11, 2012

மீண்டும் அமெரிக்காவிடம் கையேந்தும் இந்தியா!


ஈரான் மீதான அமெரிக்காவின் தடை இந்தியாவை பெருமளவில் பாதிக்கப்போகிறது. சவூதி அரேபியாவிற்கு அடுத்து இந்தியாவுக்கு அதிகமாக கச்சா எண்ணெயை அளிப்பது ஈரான் ஆகும். நம் நாட்டிற்கு தேவையான சுத்திகரிக்கப்படாத 80 சதவீத கச்சா எண்ணெயும் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 12 சதவீதம் ஈரானிடமிருந்து வாங்குகிறோம்.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்ட மசோதாவில் ஈரான் மத்திய வங்கியுடன் நிதியியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உள்நாட்டு, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பே ஈரானின் ஷிப்பிங் லைசன்சுடன் தொடர்புடைய 10 கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்த 10 நிறுவனங்களில் ஒன்று இந்தியா-ஈரான் கூட்டு நிறுவனமான ஈரானோ ஹிந்த் ஆகும். புதிய தடை விதிப்பின் மூலம் இந்தியா கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யா, சீனா நாடுகளைப் போல இந்தியாவிடம் ஈரானுக்கு எதிரான தடையில் அணிசேர அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்பது அமெரிக்காவின் கோரிக்கை. அதேவேளையில், தடையில் சில தளர்வுகளை ஏற்படுத்தக்கோரி இந்தியா அமெரிக்காவை அணுகியுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு காரணம் இந்தியா அல்ல. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் தனிப்பட்ட விருப்பங்களே ஆகும். ஆனால், ஈரானிடம் இருந்து அதிகமாக எண்ணெயை எதிர்பார்க்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கோரிக்கையை கடைப்பிடிக்க நடைமுறையில் ஏராளமான சிரமங்கள் உள்ளன. ஆனால், ஒரு உண்மையை எடுத்துக்கூறாமல் இருக்க இயலாது. நடைமுறையில் சிரமங்கள் ஏதும் இல்லையெனில் அமெரிக்காவின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் இந்திய அரசு முன்னணியில் நின்று இருக்கும். ஏனெனில் அவ்வளவு தூரம் அமெரிக்காவிற்கு அடிமை விசுவாசத்தை காட்டி வருகின்றார்கள் நமது ஆட்சியாளர்கள். குறிப்பாக பொருளாதார, வெளிநாட்டு கொள்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக அதனை நாம் கண்டு வருகிறோம்.
இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திற்காக ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இந்தியா எடுத்துள்ளது. எரி சக்தி துறையில் கூட அமெரிக்காவை சார்ந்திருக்கும் சூழலுக்கு அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை கொண்டு செல்கிறது. இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு அமெரிக்காவின் விருப்பத்தை விட நமது விருப்பங்களுக்கு நமது அரசு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்ய நமது ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. அதற்கும் மேலாக இந்தியாவின் துவக்க கால கொள்கையான அணிசேராக் கொள்கையை கைவிட்டது இந்தியாவின் மீதான நேர்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மீது தடைகளை விதிக்க பொய் காரணங்களை கூறி அமெரிக்கா ஐ.நாவில் முயற்சிகளை மேற்கொண்ட வேளையில் இந்தியாவின் நிலைப்பாடு பலகீனமானதாக இருந்தது. சுருக்கமாக கூறினால், இந்தியாவின் வெளிநாட்டு க்கொள்கையில் அமெரிக்க சார்பு கலந்ததன் காரணமாக ஈரான் தடை விவகாரத்தில் அமெரிக்காவிடம் கெஞ்சும் நிர்கதியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் எரிவாயு குழாய் திட்டம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், அங்கேயும் அமெரிக்காவின் நிர்பந்தங்களின் காரணமாக அதிக தூரம் முன்னேற முடியவில்லை.
அமெரிக்காவிடம் பயம்; அதேவேளையில் ஈரானின் எண்ணெயும் வேண்டும். இத்தகையதொரு நெருக்கடி இந்தியாவை வாட்ட துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன. கடந்த பல வருடங்களாக ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளை ஏசியன் க்ளியரிங் யூனியன் என்ற அமைப்பின் மூலமாகவே இந்தியா நடத்தி வந்தது. அமெரிக்காவிற்கு அஞ்சி இந்திய ரிசர்வ் வங்கி அந்த அமைப்பை கைகழுவியது. இந்நடவடிக்கை ஈரானுடனான வர்த்தகத்தை பெருமளவில் பாதித்தது. வாங்கும் எண்ணெய்க்கான பணத்தை அவர்களுக்கு கொடுக்க முடியாத சூழலில் எண்ணெய் வர்த்தகம் ஸ்தம்பிக்க துவங்கியது. பின்னர் ஒரு ஜெர்மன் வங்கி நியமிக்கப்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாக அந்த ஜெர்மன் வங்கியும் பின்வாங்கியது. தற்பொழுது ஒரு துருக்கி வங்கி மூலமாக ஈரானுக்கு பணத்தை இந்தியா அனுப்பி வருகிறது. இங்கேயும் அமெரிக்க-ஐரோப்பிய யூனியனின் நெருக்கடி துவங்கி விட்டது. தினமும் மூன்றே முக்கால் லட்சத்திற்கும் மேற்பட்ட பீப்பாய் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை ஈரானில் இருந்து பெற்றுவரும் இந்தியாவிற்கு அமெரிக்காவிடம் சில சலுகைகளுக்காக கெஞ்சவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்காலம் ஏதேனும் சலுகைகளை வழங்கினால் கூட அதற்கு பதிலாக வேறு வகையில் ஈடு செய்யப் போவது உறுதி.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்திய அரசின் அமெரிக்க சார்பால் நாட்டிற்கு கிடைக்கும் பலன் பூஜ்ஜியமாகும். ஆனால், அமெரிக்காவோ அரசியல், பொருளாதார, வர்த்தக துறைகளில் இந்தியாவிடமிருந்து ஆதாயம் அடைந்துவருகிறது.
அமெரிக்காவின் நோக்கங்களையும், ரகசிய திட்டங்களையும் இந்திய அரசு அவ்வப்போது அடையாளம் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கை கடைப்பிடித்ததுதான் தற்போதைய நெருக்கடிக்கு காரணமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த நூற்றாண்டில் நடத்திய போர்கள் அனைத்தும் அவர்களின் சொந்த விருப்பங்களுக்கு ஆகும். கடைசியாக போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈராக் என்றதொரு தேசத்தை சீரழித்தார்கள். அதே தந்திரத்தை தான் ஈரான் மீது தற்பொழுது சாட்டுகிறார்கள். பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுஸைன் சேகரித்து வைத்துள்ளார் என்ற போலி குற்றச்சாட்டை முன்பு ஈராக்கின் மீது சாட்டிய அமெரிக்காதான் தற்பொழுது ஈரானின் மீது அணுகுண்டு தயாரிப்பதாக குற்றம் சாட்டுகிறது.ஆனால் அமெரிக்காவோ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை தயாரித்து பாதுகாத்து வருகிறது.
ஜப்பானில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை அணுகுண்டுகளை வீசி கொடூரமாக கொலைச்செய்து எதிர்கால சந்ததியினரையும் துயரத்தில் ஆழ்த்திய அமெரிக்கா என்ற சர்வதிகார தேசம் ஒருபோதும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்(என்.பி.டி) கையெழுத்திட்டதில்லை. ஆனால் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.ஆகையால் அவர்களுக்கு உள்நாட்டு தேவைகளுக்காக அணுசக்தியை தயாரிக்கும் உரிமை உள்ளது.
என்.பி.டியில் கையெழுத்திடாத இஸ்ரேல் அணுகுண்டு தயாரித்தது குறித்து பிரச்சனையை கிளப்பாத அமெரிக்கா எரி சக்திக்கு கூட அணுசக்தியை ஈரான் உபயோகிக்கக் கூடாது என்ற பிடிவாதத்தில் உள்ளது.அமெரிக்காவிற்காக நேர்மையை இழந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை தனக்கு சேவகம் புரியும் அடிமை நாடுகளாகவே அந்நாடு கருதுகிறது.இதன் காரணமாக அமெரிக்காவின் பொய்ப் பிரச்சாரங்களை அடையாளம் காட்டவோ எதிர்க்கவோ இந்த நாடுகளால் இயலாமல் போனது. தற்போதைய நெருக்கடியை இந்தியா சமாளித்தாக வேண்டும். அதற்கு தேவை உண்மையை அங்கீகரிக்கும் துணிச்சலாகும்.
தற்பொழுது அமெரிக்காவுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளும், ஈரானுடன் விவாதிப்பதும் பலனை தரலாம். அமெரிக்கா சில தற்காலிக சலுகைகளை அளிக்கலாம்.ஈரானோ, தங்களுக்கு கிடைக்கவேண்டிய எண்ணெய்க்கான பணம் டாலரிலும், யூரோவிலும் கிடைக்காது என்பதால் ரூபாய்  அல்லது ரூபிள் மூலமாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் இவையெல்லாம் தற்காலிக் ஆறுதலாகும்.
நீண்டகால அடிப்படையில் இந்தியா தமது கொள்கைகளை மறுபரிசீலனை செய்தே தீரவேண்டும்.இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிப்பது வாஷிங்டனில் யுத்த பிரபுக்களும், கார்ப்பரேட் முதலாளிகளும், வெள்ளை மாளிகை குமஸ்தாக்களும் அல்லர் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சல் இந்திய ஆட்சியாளர்களுக்கு உருவாகவேண்டும். அதன் அடிப்படையில்தான் உறுதியான கொள்கைகளை இந்தியாவால் வகுக்க முடியும்.


No comments:

Post a Comment